இவற்றில் பல சேதமடைந்து கடலில் மூழ்கிய நிலையில் படகுகளுக்கான எவ்வித இழப்பீடும் மீனவர்களுக்கு கிடைக்கவில்லை. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், படகுகள் விடுவிக்கப்படாதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மீன்பிடி தொழில் நலிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு பாஜ ஆட்சியில் 3,137 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் பிரச்னையில் ஒன்றிய பாஜ அரசு போதுமான அக்கறை காட்டாமல், மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடந்து கொள்வதை கண்டித்தும், தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் நேற்று ராமேஸ்வரத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரம் நகராட்சி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநில மீனவர் அணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திமுக மீனவர் அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.