ராமநாதபுரம், ஜூலை 3: ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் ஜூலை 1 முதல் வழக்கறிஞர்கள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சேக் இபுராகீம் தலைமை வகித்தார். செயலாளர் கருணாகரன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒன்றிய அரசு புதிய 3 குற்றவியல் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் முழக்கங்களை எழுப்பினர்.