திருப்பத்துார்: ‘3 முறை பிரயோஜனமற்ற முதல்வராக இருந்த ஓபிஎஸ்சின் ஒரே நோக்கம், அதிமுகவை நாசம் செய்வதுதான்’ என மாஜி அமைச்சர் வீரமணி தெரிவித்து உள்ளார். திருப்பத்துார் நகர அதிமுக சார்பில், உறுப்பினர் சேர்க்கைக்கான நிகழ்ச்சி தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் வீரமணி கலந்து கொண்டு, உறுப்பினர் படிவங்களை வழங்கி பேசியதாவது: முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆலோசனைப்படி, 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. எம்ஜிஆர் மறைவுக் காலத்தில் 17 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர்.
அதன் பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் ஒன்றரை கோடி பேரை உறுப்பினர்களாக மாற்றியிருந்தார். இப்போது பழனிசாமி, அதை 2 கோடியாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் கட்சியை கந்தல் கோலமாக்க வேண்டும் என்பதுதான் ஓ.பன்னீர் செல்வத்தின் முக்கிய நோக்கம். அவர் யாருக்கும் பிரயோஜனம் இல்லாத முதல்வராக 3 முறை இருந்ததை, தவிர செய்தது என்ன? அவரிடம் இப்போதுள்ளவர்கள் அனைவரும் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதவர்கள். அதிமுகவை நாசம் செய்வது மட்டும்தான் பன்னீர்செல்வத்தின் ஒரே நோக்கம். அது ஒரு காலத்திலும் நடக்காது. உறுப்பினர் சேர்க்கையில், உண்மையாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.