3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்

வேலூர், ஜூலை 5: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் அனைத்து வகை இயக்கங்கள், அலுவலகங்களின் நிர்வாகம் திறம்படச் செயல்படும் வகையில், அதில் பணிபுரியும் பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணியிடத்தில் இல்லாமல், அவர்களை மாறுதல் செய்யவும், விருப்ப மாறுதல் ஆண்டுதோறும் நடத்தவும் தமிழக அரசால் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்படி பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் அலுவலகங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம், இயக்குநரகங்கள், பள்ளிகளில் கடந்த 30ம் தேதி நிலவரப்படி, 3 ஆண்டுகளுக்கு மேல் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களில் பணிபுரிபவர்களின் பட்டியலை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறையின் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியாளர்கள் விவரங்களைப் பட்டியலாகத் தயாரித்து இன்று (5ம் தேதி) மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும், எந்த விவரமும் விடுபடாமல் முழுமையான வகையில் அளிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை