மும்பை: கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தனது சேவையை ரத்து செய்திருந்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் மீண்டும் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ், சில ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. இந்த நிறுவனத்திற்கு சரியான நேரத்தில் வங்கி கடன்களும் கிடைக்காததால் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி தனது வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் உள்நாட்டு விமான சேவையை மீண்டும் துவங்க உள்ளதாக அதிகாரபூர்வகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் வழங்கியுள்ளது. ஏற்கனவே பணியாற்றிய பணியாளர்களில் இருந்து 140 பேர் முதல் 150 பேர் வரை மீண்டும் பணியில் சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பணிக்கு மட்டும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆட்தேர்வு நடைபெற்று வருகிறது. முதல் காலாண்டில் விமான சேவையை மீண்டும் தொடர முதற்கட்டமாக 1000 பணியாளர்களை சேர்க்க ஜெட் ஏர்வேஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …