Saturday, September 21, 2024
Home » 2 குழந்தைகளுடன் இளம்பெண் மர்ம சாவு விஷம் குடித்த கணவனும் உயிரிழப்பு

2 குழந்தைகளுடன் இளம்பெண் மர்ம சாவு விஷம் குடித்த கணவனும் உயிரிழப்பு

by Karthik Yash

தர்மபுரி: வீட்டிற்குள் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.. மேலும், விஷம் குடித்த கணவனும் பலியானார். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கும்பாரஅள்ளி ஊராட்சி மணிக்கட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன்(35), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி நந்தினி(28). இவர்களது மகன்கள் அபினேஷ்(6), தர்ஷன்(4). அபினேஷ் காரிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். வேலைக்கு சரிவர செல்லாமல் இருந்த சிவனுக்கு, குடிப்பழக்கம் இருந்தது.

இதன் காரணமாக, கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நந்தினி அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து, குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில், சிவன் வசித்து வந்த வீடு, கடந்து 2 நாட்களாக திறக்கப்படவில்லை. நேற்று காலை அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் விஏஓவிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த விஏஓ கார்த்திக், உறவினர்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்த போது, 2 குழந்தைகள் மற்றும் நந்தினி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். வீட்டிற்குள் உள்ள ஒரு அறையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த சிவனை மீட்டு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவன், தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு உயிரிழந்தார்.

சடலங்களுடன் போதையில் 2 நாள் இருந்த கணவன்: வீட்டில் ரத்த வெள்ளத்தில் நந்தினி இறந்து கிடந்த பகுதியில், அரிவாள்மனை ஒன்று கிடந்ததுடன், அப்பகுதியில் ரத்தம் அதிகளவில் உறைந்து கிடந்தது. மகளிர் சங்கத்தில் லோன் வாங்குவது தொடர்பாக, நந்தினி மறுப்பு தெரிவித்த நிலையில், லோன் வாங்கித்தரும்படி சிவன் அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும், அபினேசுக்கு பள்ளி கட்டணம் செலுத்துவது தொடர்பாகவும் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சிவன், மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு, 2 குழந்தைகளுக்கும் பூச்சி மருந்து கொடுத்து கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களாக மூன்று பேரின் உடல்களுடன், குடிபோதையில் இருந்த சிவன், நேற்று தானும் பூச்சி மருந்து குடித்து, தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.

You may also like

Leave a Comment

1 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi