2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை: கடன் நெருக்கடியால் விபரீதம்

சமயபுரம்: கடன் நெருக்கடியால் 2 குழந்தைகளை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கிழக்கு காமராஜர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (40). ரைஸ் மில் கூலித்தொழிலாளி. இவரது மனைவி கீர்த்திகா (32). இருவரும், கடந்த 15 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 குழந்தைகள். இதில் மகன் கோகுல்நாத் (14), அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பும், மகள் சாய் நந்தினி(11), பெண்கள் மேல்நிலை பள்ளியில் 6ம் வகுப்பும் படித்து வந்தனர். சிலம்ப வீரர்களான இருவரும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வழக்கம்போல் மண்ணச்சநல்லூரில் உள்ள ரைஸ்மில்லுக்கு வேலைக்கு சென்ற கிருஷ்ணமூர்த்தி, நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வந்தார். கதவு திறந்த நிலையில் கிடந்ததை பார்த்து பதறி போய் உள்ளே சென்று பார்த்தார். அங்கு ஆஸ்பெஸ்டாஸ் சீட் மேற்கூரை கம்பியில் மனைவி, மகன், மகள் தனித்தனியாக துப்பட்டாவில் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு கதறி அழுதார். தகவல் அறிந்து மண்ணச்சநல்லூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்களது உடல் அருகே தூக்க மாத்திரைக்கான காலி அட்டை கிடந்துள்ளது.

இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களுக்கு முன் கணவருக்கு நடந்த விபத்தில் மருத்துவ செலவிற்கும் மற்றும் மகனின் ஆஸ்துமா, சிறுநீரக பிரச்னை என பல்வேறு மருத்துவ செலவுக்கு மகளிர் சுய உதவி குழு , பைனான்ஸ், கந்துவட்டி என பல்வேறு இடங்களில் ரூ.8லட்சம் வரை கீர்த்திகா கடன் வங்கி இருந்ததும், குழுவில் உள்ள ஊழியர்கள் தினமும் வீட்டுக்கு வந்து பணம் கேட்டு கீர்த்திகாவை தொந்தரவு செய்ததும், இரவு வரை வீட்டில் அமர்ந்து ஆபாசமாக பேசி பணத்தை கட்ட நெருக்கடி கொடுத்தும் வந்துள்ளனர்.

கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வந்ததால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முடிவு செய்த கீர்த்திகா, கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் மகன், மகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்தும், இருவரும் மயக்க நிலையில் இருந்த போது அவர்களை முதலில் துப்பட்டாவில் தூக்கில் மாட்டி தொங்க விட்ட பின்னர் அவர்களுக்கு நடுவில் கீர்த்திகாவும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். கடன் நெருக்கடி தான் தற்கொலைக்கு காரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’ என்றனர். மகன், மகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மண்ணச்சநல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்