திருவாரூர், ஆக. 24: திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்கள் உயர்கல்வி கடன் பெறுவது தொடர்பான முகாம் வரும் 29ம் தேதி அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மாணவ, மாணவிகள் தங்களின் உயர்கல்வி படிப்பை தொடரும் பொருட்டு கல்லூரியில் சேர்வதற்கு முன்னதாக கல்விகடனை வழங்கிடுவதற்கு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்களின் உயர்கல்விக்கான கடன் பெறுவது தொடர்பான முகாமானது திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், கொரடாச்சேரி, குடவாசல் மற்றும் நன்னிலம் என மாவட்டம் முழுவதும் இருந்து வரும் 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வரும் 29ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே இந்த முகாமில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.