தாய்லாந்த்: தாய்லாந்தில் நடைபெற்றுவரும் 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் பால் வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 29 நிமிடம் 33.26 வினாடிகளில் இலக்கை கடந்து அபிஷேக் பால் 3வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். இந்தாண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் தொடக்க நாளில் அபிஷேக் பால் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி தங்கம் வென்றார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடைபெற்ற மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ஆந்திராவை சேர்ந்த 23 வயதான ஜோதி யாராஜி 13.09 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பெற்றார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இன்று இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது. மும்முறை தாண்டுதலில் கேரளாவை சேர்ந்த அபுபக்கர் அப்துல்லா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். 16.92 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனையுடன் அபுபக்கர் அப்துல்லா தங்கப்பதக்கம் வென்றார்.