நாகப்பட்டினம்,ஜூலை31: காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பைக்கில் கடத்திய 250 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகப்பட்டினம் வழியாக தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு மதுபானம் கடத்துவதாக எஸ்பி ஹர்ஷ்சிங் தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திட்டச்சேரி பஸ் நிலையம் அருகே திட்டச்சேரி சப் இன்ஸ்பெக்டர் அக்பர்அலி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டர் சைக்கிளில் மூட்டையில் 250 மதுபாட்டில்கள் இருந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பூக்காரத்தெருவை சேர்ந்த மாதவன்(36), வேளாங்கண்ணி செட்டித்தெருவை சேர்ந்த அருள்பிரகாசம்(49) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபானங்களை மோட்டார் சைக்கிளில் நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி பகுதிக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து 250 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.