மேலும், கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணித் திட்டத்தின்படி கிராம பகுதிகளில் அமைந்துள்ள 1,250 கோயில்களுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ள இந்த ஆண்டு முதல் தலா 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 5ம்தேதி சென்னை, வில்லிவாக்கத்தில் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்கள் மற்றும் 1,250 கிராமப்புறத் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.2 லட்சம் வீதம் ரூ.50 கோடிக்கான வரைவோலைகளை வழங்கினார். அதை தொடர்ந்து, 2022-23ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்கள் மற்றும் 1,250 கிராமப்புறத் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள 2 லட்சம் ரூபாய் வீதம் 50 கோடி ரூபாய்க்கான வரைவோலைகளை வழங்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அந்தந்த கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான வரைவோலைகளை வழங்கினார். இதன்மூலம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மட்டுமின்றி, கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்றிடும். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.