சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பாரி ஆண்ட பரம்பு மலை என்னும் பிரான்மலை உள்ளது. மலை உச்சியில் வெற்றி விநாயகர், பாலமுருகன் கோயில்கள் உள்ளன. 2,500 அடி உயரமுள்ள இம்மலையில் ஏறும் மக்கள் கீழே இறங்க வழி தெரியாமல் தவிக்கும் நிலை ஏற்படும். இந்நிலையில், திருப்பத்தூர் அருகே பொன்னடைபட்டியை சேர்ந்த விஷ்ணு ராம் (21), நேற்று முன்தினம் பிரான்மலை உச்சிக்கு தனியாக சென்றார். திரும்பி வரும்போது பாதை தெரியாமல் தவறிவிட்டார். இதுகுறித்து வீட்டிற்கு எஸ்எம்எஸ் அனுப்பினார். அதன்பின்பு போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் பிரான்மலை அடிவாரத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர். கிராம இளைஞர்கள் மற்றும் போலீஸ் உதவியுடன் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலை மீண்டும் தேடினர். அப்போது மலை உச்சியின் ஒரு பகுதியில் ராம் இருப்பதை கண்டுபிடித்தனர். பாறையில் வழுக்கி கால் அடிபட்டதால் நடக்க முடியாமல் இருந்துள்ளார். தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். …