சென்னை: சென்னை விருகம்பாக்கம் சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா தலைமை வகிக்கிறார். விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, சட்டமன்ற உறுப்பினர் அலுவலத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி சார்பில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, 10 கிலோ காய்கறிகள் 2,598 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதுகுறித்து எம்எல்ஏ பிரபாகர்ராஜா கூறுகையில், “ விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எந்த நேரத்திலும் புகார்களை தெரிவிக்கலாம். மேலும் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில், ‘நம்ம விருகம்பாக்கம் என்ற பெயரில் செல்போன் ஆப்’ தொடங்கப்பட உள்ளது. இதிலும் புகார்களை தெரிவிக்கலாம். மேலும் இலவச தொலைபேசி எண்ணிலும் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது” என்றார்….