தர்மபுரி, அக்.19: தர்மபுரி மாவட்ட தொழில் மையம் சார்பில், தொழிற்கடன் வசதியாக்கல் மற்றும் கல்வி கடன் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு, 24 பேருக்கு ₹12.76 கோடி மதிப்பீட்டில் தொழிற்கடன் மற்றும் கல்விகடன்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ‘தர்மபுரி மாவட்ட குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, 2024-2025ம் ஆண்டில் ₹1631.78 கோடி கடன் வழங்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த வகையில், மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கடந்த மாதம் 30ம் தேதி வரை, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ₹843.20 கோடி தொழில் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை 179 பயனடைந்த பயனாளிகளுக்கு ₹25.89 கோடிக்கான தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது. இம்முகாமில் சுமார் ₹12.76 கோடிக்கு 24 பேருக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது,’ என்றார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம், டேன் காயர் இன்டர்நேசனல் மார்க்கெட்ஸ் அசோசியேட் கவுதம் சிவம், மாவட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் சரவணன், மாவட்ட தொழில் நிறுவனங்கள் சங்க தலைவர் வினோத், தொழில் முனைவோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.