22 கிமீ தூரத்துக்கு விரட்டிய போலீஸ் ஓடும் லாரியில் இருந்து பசுக்களை ரோட்டில் தள்ளிய கடத்தல் கும்பல்: குருகிராமில் நெஞ்சத்தை பதற வைக்கும் சம்பவம்

குருகிராம்: அரியானாவில் பசுக்களை கடத்தி சென்றவர்களை 22 கிமீ தூரம் சினிமா பாணியில் போலீசார் துரத்திச் சென்று பிடித்தனர். கடத்தல்காரர்கள் 5 பேர்  கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த  துப்பாக்கிகள்  பறிமுதல் செய்யப்பட்டன. அரியானாவில் ஆட்சி செய்யும் பாஜ அரசு, பசு கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது. பசுக்களை பாதுகாப்பதற்கு ஒரு ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அங்கு பசுக்கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அரியானா மாநிலம், குருகிராமில் உள்ள முக்கிய சாலையில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டெல்லி எல்லையில் இருந்து  குருகிராமை நோக்கி ஒரு மினி லாரி வந்தது. சோதனை நடத்துவதற்காக அதை நிறுத்தும்படி போலீசார் தடுத்தனர்.  ஆனால், டிரைவர் மினி லாரியை வேகமாக ஓட்டி சென்றார். இதையடுத்து போலீசார் அந்த லாரியை விரட்டி சென்றனர். மொத்தம் 22 கிமீ துார விரட்டலுக்கு பின் அந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசார் விரட்டியபோது பயந்து போன கடத்தல்காரர்கள், லாரி அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும் போதே பசுக்களை ரோட்டில் தள்ளி விட்டது நெஞ்சத்தை பதற  வைத்தது. போலீசார் கடத்தல் லாரியை  துரத்துவதும், லாரியை மடக்கி பிடிப்பதற்காக   துப்பாக்கியால் சுட்டு டயரை பஞ்சராக்கிய வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வைரலாக பரவியது.   லாரியில் இருந்த  கடத்தல்காரர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும்,  சினிமாவில் வருவது போல் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அசாமில் ஒருவர் சுட்டுக்கொலைஅசாம் மாநிலம், துப்ரி மாவட்டத்தில் உள்ள சபத்கிராம் கிராமம் அருகே ஒரு கும்பல் பசுக்களை கடத்தியது. இது பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு அவர்கள் விரைந்தனர். அப்போது, கடத்தல்காரர்கள்  காரில் தப்பிச் சென்றனர். போலீசார் அவர்களை விரட்டியபோது, கடத்தல்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.  போலீசார்  நடத்திய பதிலடி தாக்குதலில், கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.  மற்றொருவர் தப்பி விட்டார்….

Related posts

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் மீண்டும் துவங்கிய ரோப் கார் சேவை: 5 நாளில் 1,230 பக்தர்கள் பயணம்

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல்