தூத்துக்குடி: தூத்துக்குடியில் 2,117 ஏக்கர் விவசாய நிலங்களை மோசடியாக பவர் பத்திம் பதிவு செய்தது தொடர்பாக சார் பதிவாளர் மோகன்தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, செந்திலாம்பண்ணை கிராமங்களில் 500 விவசாயிகளுக்கு சொந்தமான 2,117 ஏக்கர் விவசாய நிலங்களை தனி நபர் இருவருக்கு பவர் பத்திரம் பதிவு செய்து கொடுத்ததற்கு உடந்தையாக இருந்ததாக புதுக்கோட்டை சார்பதிவாளா் மோகன்தாஸ் மீது பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இந்த புகார் தொடர்பாக மாவட்ட பதிவாளர் பால்பாண்டி விசாரணை நடத்தி, பத்திரபதிவு துறை ஐஜி சிவன் அருளிடம் அறிக்கை சமர்பித்தார். அதில் விவசாய நிலத்தை கோவையை சேர்ந்த ஒரு தனியார் அக்ரோ நிறுவன அதிகாரிக்கு நெல்லையை சேர்ந்த ஒரு தனி நபர் பவர் வழங்கியது போல பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதும், நில உச்சவரம்பு சட்டவிதிகளை மீறி இந்த பத்திரபதிவை மோகன்தாஸ் செய்துள்ளது குறித்தும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் நெல்லை பத்திரபதிவு துறை டிஐஜி (பொறுப்பு) கவிதாராணி, புதுக்கோட்டை சார் பதிவாளர் மோகன்தாசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் மூலம் தனி நபர் இருவருக்கு பதிவு செய்து கொடுக்கப்பட்ட பவர் பத்திரமும் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. …