அவனியாபுரம்: முதலில் நாளைக்கு இருப்போமா என்பதை பார்ப்போம் என மதுரையில் சமக தலைவர், நடிகர் சரத்குமார் தெரிவித்தார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த சமக தலைவர் சரத்குமார் அளித்த பேட்டி: நடிகர் விஜய் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். இது வரவேற்கத்தக்கது தான். எல்லா நடிகர்களும் தொடர்ந்து பொதுநல சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நானும் நடிக்க வந்த காலத்தில் இருந்து நிறைய உதவிகளை செய்து வருகிறேன். நான் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருக்கிறேன்.
விஜய் உள்பட எல்லாரும் அரசியலுக்கு வரலாம். ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வர வேண்டியது அவசியம். இது சமத்துவ நாடு. 14 வயசிலேயே பள்ளியிலேயே பாடத்திட்டத்தில் அரசியலை கற்று கொடுக்க வேண்டும். யார் வந்தாலும் சந்தோஷம். மகிழ்ச்சிதான். 2026ம் ஆண்டு தேர்தலுக்கு ரொம்ப தூரம் உள்ளது. முதலில் நாளைக்கு இருப்போமான்னு பார்ப்போம். இவ்வாறு பேசினார். சமீபத்தில் தான் சரத்குமார் நூறு வருஷத்துக்கு மேல் வாழ்வது எப்படி என்கிற ரகசியத்தை சொல்கிறேன் என்ற நிலையில் நாளைக்கு இருப்போமான்னு பார்ப்போம் என்ற பேச்சு சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.