சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக திமுக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது. அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை திமுக தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைப்புக்குழு பின்வருமாறு அமைக்கப்படுகிறது. அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.