டெல்லி: 2024ல் மோடி அரசிடம் இருந்து மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். “அடிப்படைகளுக்கு அப்பால்” என்ற தலைப்பில் வருடாந்திர கல்வி அறிக்கை வெளியிடப்பட்டது, 26 மாநிலங்களில் உள்ள 28 மாவட்டங்களில் இருந்து 34,745 மாணவர்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. இது 14 முதல் 18 வயது வரையிலான பிரிவை மையமாகக் கொண்டது. இந்த அறிக்கையில் கல்வியின் தோல்வியை குறிக்கப்பட்டுள்ளது.
இதனை மேற்கோள்கட்டி மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, அமிர்த காலத்தை விட தற்போது கல்வியின் காலமே இந்தியாவுக்கு தேவை. ஒன்றிய அரசின் அறிக்கைப்படி 14-18 வயது கிராமப்புற மாணவர்களில் 56.70% பேர் 3 ம் வகுப்பு கணக்குகூட போட தெரியவில்லை. 26.50% பேருக்கு தங்கள் தாய்மொழியில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளை சரளமாக படிக்க முடிவதில்லை.
17-18 வயது வரையுள்ள இளைஞர்களில் 25% பேர் ஆர்வமின்மையால் கல்வி கற்பதை நிறுத்தி விடுகிறார்கள். 50%க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தினசரி பயன்பாட்டில் உள்ள கணக்குகளைக் கூட போட முடிவதில்லை. பெரும்பாலான கற்றல் குறியீடுகள் கொரோனா காலத்துக்கு முந்தைய காலத்தைவிட மோசமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.