புதுடெல்லி: வரும் 2024-25ம் ஆண்டிற்குள் மீன் ஏற்றுமதியை 1 லட்சம் கோடியாக உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறி உள்ளார். ஒன்றிய தகவல் ஒலிபரப்பு, மீனவளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல் முருகன், கேரளாவின் கொச்சியில் உள்ள தோப்பம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப் உட்பட நாட்டில் உள்ள ஐந்து மீன்பிடி துறைமுகங்கள் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும். இதன் ஒருபகுதியாக ஐஸ் தயாரிப்பு மையங்கள், பதப்படுத்தும் வசதிகள், துறைமுகத்திலேயே ஏற்பாடு செய்யப்படும். துறைமுகங்கள் நவீனமயமாக்கப்படுவதன் மூலம், மீனவர்கள் தங்களது மீன்களுக்கு நல்ல விலை பெற முடியும். தமிழ்நாட்டில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட உள்ள கடல்பாசி பதப்படுத்தும் மையம் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது மீன்வளத்துறையில் பெண்களின் பொருளாதார அதிகாரமயமாக்கலையும், வேலைவாய்ப்புகளையும் உறுதி செய்யும். வரும் 2024-25ம் ஆண்டிற்குள் மீன் ஏற்றுமதியை 1 லட்சம் கோடியாக உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….