Friday, June 28, 2024
Home » 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நாகர்கோவில் மாநகராட்சிக்கு ₹200.99 கோடி வருவாய்

2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நாகர்கோவில் மாநகராட்சிக்கு ₹200.99 கோடி வருவாய்

by Karthik Yash

நாகர்கோவில், ஜூன் 28: நாகர்கோவில் மாநகராட்சியில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தார். கூட்டத்தின் தொடக்கத்தில் 2024-25ம் நிதியாண்டுக்கான உத்தேச நிதிநிலை அறிக்கையை மேயர் மகேஷ் வாசித்தார். அதன்படி வருவாய் மற்றும் மூலதன நிதியாக ₹147.81 கோடி, குடிநீர் வடிகால் மூலதன நிதியாக ₹53.08 கோடி என்று ரூ₹200 கோடியே 99 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அதேபோல் வருவாய் மற்றும் மூலதனத்தில் செலவினம் ₹155.98 கோடி, குடிநீர் வடிகால் செலவினம் ₹54.65 கோடி என மொத்தம் ₹210.61 கோடி செலவினமாக உள்ளது. இதன்படி பற்றாக்குறை ₹9.62 கோடி ஆகும்.

இதையடுத்து கவுன்சிலர்கள் தரப்பில் கூறியதாவது:  புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டத்தில் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தவறான தகவல்களை மாநகராட்சிக்கு தருகின்றனர். வார்டுகளில் ஒவ்வொரு தெருக்களிலும் பல வீடுகளுக்கு இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. ஒரு வார்டில் கூட முற்றாக இணைப்புகள் வழங்கப்படவில்லை. இணைப்பு வழங்க குடியிருப்பு வாசிகளிடம் பணம் வசூலிக்கின்றனர். சில இடத்தில் இணைப்பு வழங்கப்பட்ட மீட்டர் பாக்ஸ் பகுதியில் சோதனை ஓட்டத்தின்போது தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் குழாய்கள் இணைப்பு விடுபட்டு குடிநீர் கசிவு ஏற்படுகிறது. இதுவரை 31 முறை சோதனை ஓட்டம் நடந்துள்ளது. ஆனால் ஒருமுறைகூட தண்ணீர் கசிவு சரி செய்யப்படவில்லை. கடந்தாண்டு பட்ெஜட்டில் 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது எனவும், தற்போதைய பட்ஜெட்டில் 98 சதவீதம் நிறைவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டபோது தோண்டப்பட்ட பள்ளங்களும் சரியாக மூடப்படவில்லை. அதனை உடனே மூடவேண்டும்.
 தெருவிளக்குகள் பிரகாசமாக இல்லாமல் மெழுகுவர்த்தி போல் மங்கலாக எரிகின்றன. பழுதான தெருவிளக்குகளை உடனுக்குடன் சரிபார்ப்பதில்லை.
 செயல்படாத வரிவசூல் மையங்கள் செயல்படுத்த வேண்டும். சர்வர் பழுது என வரி செலுத்த வருபவர்கள் அலக்கழிக்கப்படுகின்றனர்.
 மாநகராட்சியில், 78 கடைகள் ஏலம் விடப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் குத்தகை என்பது 9 ஆண்டுகள். முதல் 3 ஆண்டுகளுக்கு 5 சதவீதம் வாடகையை உயர்த்தியும், அதன் பின்னர் 15 சதவீதம் உயர்த்தி, ஏற்கனவே வாடகையை எடுத்தவர்களுக்கு வழங்க வேண்டும். ஏற்கனவே கடையை வாடகைக்கு எடுக்கும் போது, முன்பணத்துடன், ஒரு ஆண்டிற்கான வாடகையை முதலில் செலுத்தியுள்ளனர். இதுதவிர கடை கட்டுமான செலவும் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர கொரோனா காலத்தில் கடையை மூடியது என பலத்த நஷ்டத்தில் உள்ள வியாபாரிகளை பாதிக்கும். எனவே 9 ஆண்டுகள் கடந்த கடைகளை மட்டும் வாடகைக்கு விடலாம் என்பது உள்பட பல்வேறு குறைகளை தெரிவித்தனர். இதனை கேட்டபிறகு மேயர் மகேஷ் பதிலளித்து கூறியதாவது:
 குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கவுன்சிலர்களின் புகார்களுக்கு பதில் தெரிவிக்க வேண்டும். புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டத்தை பொறுத்தவரை கிருஷ்ணன்கோவில் நீரேற்றம் வரும் வரை கசிவோ, குழாய் சேதமோ என எவ்வித பிரச்னையும் இல்லை.
வீட்டு குடிநீர் இணைப்புகளில் உள்ள பழுதுகளை உடனே சரி செய்ய வேண்டும். 52 வார்டுகளிலும், இணைப்புகள் வழங்கப்படாதது குறித்து, பட்டியல் தயாரித்து, அதனை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் வழங்குங்கள்.
 தற்போது சானல்களில் மாநகராட்சி தூர்வாரியபோது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கால்வாய்களை நீங்களே தூர்வாரவேண்டுமென எச்சரிக்கை செய்வதோடு, கலெக்டர் மூலமும் நீர்வளத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெருவிளக்கு பழுதுகள் உடனே சரி செய்யப்படும்.
 கடைகளை ஏலம் என்பது தமிழ்நாடு முழுவதிற்குமான அரசின் கடந்தாண்டு உத்தரவாகும். எனினும், தற்போது நாகர்கோவிலில் உள்ள சூழலை கருத்தில் கொண்டு, ஏற்கனவே விடப்பட்ட கடைகளை 9 ஆண்டுகள் வரை வழங்க அரசுக்கு பரிந்துரை ெசய்யப்படும். அரசின் முடிவின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுவரை கடைகள் ஏலம் விடும் தீர்மானம் ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு மேயர் மகேஷ் பேசினார்.
பிரதமர், முதல்வருக்கு வாழ்த்து
n கூட்டம் தொடங்கியதும், சரலூர் ரமேஷ், 3வது முறையாக பிரதமரான மோடிக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்ற மேயர், மகேஷ், 3வது முறையாக பிரதமர் ஆன மோடிக்கும், தமிழ்நாட்டில் 40க்கு 40 வெற்றி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.
n பட்ஜெட் தாக்கலின் போது, 2வது ஆண்டாக இந்த முறையும், நிதிநிலை அறிக்கை மெரூண் கலர் ப்ரீப்கேஷில் வைத்து ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மேயர் மகேஷிடம் வழங்கினார்.

You may also like

Leave a Comment

4 + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi