புதுடெல்லி: 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தலைவலி கொடுக்கும் வகையில் 350 எம்பி தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த தொகுதிகள் காங்கிரசை காட்டிலும் மாநில கட்சிகளின் ஆதிக்கம் உள்ள தொகுதிகள் என்பதால் அவை பாஜக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.நாடு முழுவதும் அடுத்தாண்டு ஒன்பது மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநில தேர்தல் முடிவுகள் 2024ல் நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. மேற்கண்ட ஒன்பது மாநிலங்கள் மட்டுமின்றி, சட்டமன்றத் தேர்தல் நடைபெறாத மாநிலங்களில் கூட, மக்களவை தேர்தலுக்கான வியூகங்களை அந்தந்த மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக பாஜக, மக்களவை தேர்தலுக்கான வேலைகளை தொடங்கிவிட்டது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியை காட்டிலும், பல்வேறு மாநிலங்களின் மாநில கட்சிகளை எதிர்கொள்ள முடியாமல் ஆளும் பாஜக கடுமையான சவாலை எதிர்கொண்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரம் மாநில கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றின. இத்தகைய சூழ்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் மோதுவதை காட்டிலும் மாநில கட்சிகளுடனான போட்டியை எப்படி எதிர்கொள்வது? என்பது பற்றி பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் திமுக, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம், பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ், தெலங்கானாவில் பி.ஆர்.எஸ், ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி, ஜார்க்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்சா, டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அகாலி தளம் ஆகிய கட்சிகள் அடங்கும்.2014 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 இடங்களில் திமுக 24 இடங்களையும், ஆந்திராவில் 25 இடங்களில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி 22 இடங்களையும், தெலுங்கு தேசம் 3 இடங்களையும், பீகாரில் 40 இடங்களில் ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களையும், உத்தரபிரதேசத்தில் 80 இடங்களில் பகுஜன் சமாஜ் 10 மற்றும் சமாஜ்வாதி 5 இடங்களையும், மேற்கு வங்கத்தில் 42 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களையும் வென்றன. மகாராஷ்டிராவில் சிவசேனா 18 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 5 இடங்களிலும், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் 12 இடங்களிலும், தெலங்கானாவில் 17 இடங்களில் 9 இடங்களில் பி.ஆர்.எஸ் கட்சியும், ஜார்க்கண்டில் 14 இடங்களில் ஜே.எம்.எம் 1 இடத்திலும், பஞ்சாபில் 13 இடங்களிலும், சிரோன்மணி அகாலி தளம் 2 இடங்களிலும் என்று மாநில கட்சிகள் அதிகளவில் வெற்றிப் பெற்றன. காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் 2014ல் நடந்த மக்களவை தேர்தல் முதல் தற்போது வரை வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் தோல்வியை சந்தித்து வருகிறது. ஆனால், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், அரியானா, பஞ்சாப், உத்தரகண்ட், குஜராத், தெலங்கானா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிட்டளவில் பலம் உள்ளது. எப்படியாகிலும் நாடு முழுவதும் 12 மாநிலங்களில் சுமார் 350 மக்களவை ெதாகுதிகள் மாநில கட்சிகளுடன் மோத வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளதால், அக்கட்சிகளுடனான சவாலை எதிர்கொள்வது குறித்து வியூகங்களை வகுத்து வருகிறது….