டெல்லி : வரும் 2024ம் ஆண்டில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்படுவார் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். காந்திநகர் தொகுதி மக்களவை எம்.பியான அமித்ஷா ஒருநாள் பயணம் மேற்கொண்டுள்ளார். காந்திநகர் ரயில்நிலையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் நடத்தும் தேநீர் கடை, கோலோல் நகரில் ஆரம்ப சுகதாார நிலையம் ஆகியவற்றையும் அமித் ஷா தொடங்கிவைத்தார்.அப்போது பேசிய அவர், இந்த ரயில் நிலையத்தில் மண் குவளையில் தேநீர் விற்கப்படுவதாகவும் இதன் மூலம் கிராமப்புற வேலைவாய்ப்பு மேம்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பான்சர் நகரில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். பிரதமர் நரேந்திர மோடி பொது மக்கள் சேவைக்கு வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்து இருப்பதாக தெரிவித்த அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர், பிரதமர் என தொடர்ந்து 20 ஆண்டுகள் எந்த ஒரு தலைவரும் பதவி வகித்ததில்லை என்றார். பிரதமரை போன்று உலகில் எந்த ஒரு தலைவரும் ஓய்வு இல்லாமல் 20 ஆண்டுகள் மக்கள் பணியாற்றியதில்லை என்றும் அமித்ஷா தெரிவித்தார். ஜனநாயக நாட்டில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது 20 ஆண்டுகள் சேவையாற்றியுள்ள பிரதமர் மோடி, வரும் 2024ம் ஆண்டிலும் இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அமைச்சர் அமித்ஷா கூறினார். …