டெல்லி: நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட நிகழ்ச்சிகள், போட்டியாளர் களுக்கான பிரத்யேக ஏற்பாடுகள் என அனைத்தும் பாராட்டத் தக்கவையாக அமைந்தது.
இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சென்னை விமான நிலையத்தில் பிரதமர்மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான தமிழ்நாட்டின் தொலைநோக்கு பார்வையை கருத்தில் கொண்டு அடுத்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தார்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், விருந்தோம்பலையும் உணர்த்தும் வகையில் கேலோ இந்தியா போட்டி நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி சிறந்த களமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.