சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலின்போது வேட்பு மனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கடந்த 2021 சட்ட மன்ற தேர்தலின் போது தன்னுடைய தேர்தல் பிராமண பாத்திரத்தில் ரூ.1 கோடி அளவிற்கு சொத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை குறைத்து காட்டியதாக, தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த 2016-ம்ஆண்டு தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் தனக்கு ரூ.3.16 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்த பழனிச்சாமி, 2021 தேர்தலில் தனது சொத்து மதிப்பில் ரூ.1 கோடிக்கு மேல் குறைத்து காட்டியுள்ளார். எனவே சொத்து விவரங்களை மறைத்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சேலம் சிறப்பு நீதிமன்றம், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரிவான விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் இந்த வழக்கு தேர்தல் தொடர்பானது என்றும், விசாரணைக்கு உகந்ததில்லை என்றும், இதனால் சேலம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் வழக்கறிஞர் ஆஜராகி புகார் தொடர்பாக ஏற்கனவே சேலம் குற்றப்பிரிவு போலீசார் பழனிச்சாமி மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக பதில்மனு தக்கல்ஸ் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.