திருப்போரூர்: மேலக்கோட்டையூர், நாவலூர், தாழம்பூர், சிறுசேரியில் 200 கண்காணிப்பு கேமராக்களை தாம்பரம் ஆணையர் அமல்ராஜ் இயக்கி வைத்தார். தாம்பரம் காவல் ஆணைய சரகத்திற்கு உட்பட்ட மேலக்கோட்டையூரில் வளர்ச்சியடைந்து வரும் குடியிருப்புகள், மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றின் காரணமாக, புறக்காவல் நிலையம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமரன் தலைமை தாங்கினார். தாழம்பூர் காவல் ஆய்வாளர் வேலு வரவேற்றார். தாம்பரம் இணை ஆணையர் மூர்த்தி, பள்ளிக்கரணை இணை ஆணையர் தீபா சத்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், மேலக்கோட்டையூர் புறக்காவல்நிலையத்தை திறந்து வைத்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 100 சிசிடிவி கேமராக்களை இயக்கி வைத்தார்.
இதையடுத்து, தாழம்பூர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்தார். மேலும் நாவலூர், தாழம்பூர், சிறுசேரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 100 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பயன்பாட்டையும் ஆணையர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் எல்.இதய வர்மன், மேலக்கோட்டையூர் ஊராட்சி தலைவர் கவுதமி ஆறுமுகம், நாவலூர் ஊராட்சி தலைவர் மகாலட்சுமி ராஜாராம், தாழம்பூர் ஊராட்சி தலைவர் முனுசாமி, சிறுசேரி ஊராட்சி தலைவர் தேவராஜன், துணை தலைவர் எஸ்.எம்.ஏகாம்பரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.