அருப்புக்கோட்டை, ஜூன் 1: அருப்புக்கோட்டை அருகே புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை டவுன் எஸ்ஐ முத்துராஜ் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை அருகே தொட்டியாங்குளம் மேம்பாலம் பகுதியில் சந்தேகம் அளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அதில் ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியை சேர்ந்த பச்சை பெருமாள் (36) என்பதும், விற்பனைக்காக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பச்சை பெருமாளை கைது செய்த போலீசார் 200 கிலோ புகையிலை பொருட்கள், 2 செல்போன்கள், டூவீலரை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய முத்துராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்