சென்னை: 20 மாதங்களுக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக செயல்பட தொடங்கியதால் வழக்கறிஞர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கொரோனா ஊரடங்கை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் அலுவல் அறைகள் மூடப்பட்டிருந்தன. ஒன்றிய, மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்கறிஞர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். வேறு எவருக்கும் அனுமதி இல்லை எனவும், வழக்கறிஞர் அறைகள் மூடப்படும் எனவும் தலைமை பதிவாளர் தெரிவித்திருந்தார். அதன்படி கொரோனா ஊரடங்கு காரணமாக காணொலி காட்சி வாயிலாக மட்டுமே வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் மட்டுமே நேரில் ஆஜராகி வாதிட்டு வந்தனர். தற்போது நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக செயல்பட தொடங்கியிருக்கிறது. அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி இன்று நேரடி விசாரணை மற்றும் காணொலி காட்சி ஆகிய 2 முறைகளிலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்க அலுவலகங்களும் இன்று முதல் திறக்கப்பட்டிருக்கிறது. …