2 முறை தேசிய விருது பெற்ற பிரபல மலையாள நடிகை லலிதா காலமானார் : காதலுக்கு மரியாதை, அலைபாயுதே படங்களில் நடித்தவர்!!

திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகை லலிதா (73), உடல்நலக்குறைவால் கொச்சியில் காலமானார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலே கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட லலிதா தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து உடல்நிலை தேறியநிலையில் கொச்சியில் உள்ள தனது மகன் சித்தார்த் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.22) இரவு நடிகை லலிதா காலமானார்.கடந்த 1969ம் ஆண்டு கே.எஸ் சேது மாதவன் இயக்கத்தில் வெளியான ‘கூட்டுக்குடும்பம்’ படத்தில் நடிகையாக அறிமுகமான இவர், மலையாளம் மற்றும் தமிழ் என மொத்தம் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  தமிழில் ‘காதலுக்கு மரியாதை’, ‘பரமசிவன்’, ‘கிரீடம்’, ‘அலைபாயுதே’, ‘மாமனிதன்’ ,’காற்று வெளியிடை’ உள்ளிட்ட பல படங்களில் லலிதா நடித்துள்ளார். இவர் காலமான பிரபல இயக்குநர் பரதனின் மனைவி ஆவார்.இவர் இரண்டு முறை சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும், நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் வென்றுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்றவுடன் ‘கேரள சங்கீத நாடக அகாடமி’யின் தலைவராக லலிதா நியமிக்கப்பட்டார். நடிகை லலிதாவின் மரணம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மறைந்த லலிதாவின் இறுதிச்சடங்கு (இன்று புதன்) முழு அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது. …

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு