2 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு-வரலாற்று ஆய்வுக் குழுவினர் ஆய்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து பாறை ஓவியங்களை வரலாற்று ஆய்வு குழுவினர் கண்டறிந்துள்ளனர்.கிருஷ்ணகிரியில் இருந்து மகாராஜகடை செல்லும் சாலையில், மேல்பட்டி அடுத்த தர்மராஜா நகருக்கு மேற்கே ஒரு பாறையில் ஓவியங்கள் இருப்பதை கண்டறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மற்றும் மாவட்ட அரசு அருங்காட்சியமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். வரலாற்றுக் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், மனோகரன், விஜயகுமார், வரலாறு ஆசிரியர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.இப்பாறை ஓவியங்கள் குறித்து அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இப்பாறையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்தினால் வரையப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன. பாண்டில் விளக்கு, குறியீடுகள் மற்றும் மனித உருவங்கள் இவற்றுள் அடங்கும். குறியீடுகளில் வட்டத்துக்குள் கூட்டல் குறி, அவற்றுக்கிடையே 4 புள்ளிகள், பெருக்கல் குறியின் இரண்டு முனைகளும் இணைந்த அமைப்பு மற்றும் ஆறு முனையுடன் கூடிய நட்சத்திரம் வட்டம் பல கட்டங்களாக பிரிக்கப்பட்ட கோலம் போன்ற அமைப்பு குறிப்பிடத்தக்கவையாகும். வட்டத்துக்குள் மனிதன், சதுரத்துக்குள் மனிதன் என வரையப்பட்டுள்ளது. இவை இறந்த மனிதனை அடக்கம் செய்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. மேலும் ஏழு எண்ணிக்கையில் இறந்தவர்களின் ஆன்மாவைக் குறிக்கும் பாண்டில் விளக்குகள் காட்டப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவிலும், ஒவ்வொரு விதமாக வெவ்வேறு கோணங்களில் வரையப்பட்டுள்ளன. மொத்தத்தில் இந்த ஓவியங்கள் இறந்தோரின் நினைவாக வரையப்பட்டுள்ளது என்பது உறுதியாகும்.  இக்குகைப் போன்ற அமைப்பிற்கு முன்பு பரந்த வயல்வெளிகள் காணப்படுகின்றன. அவ்விடங்களில் முன்பொரு காலத்தில் கல்திட்டைகள் இருந்திருக்க வேண்டும். அக்கல் திட்டைகளையும் இந்த ஓவியத்தில் காட்டியுள்ளனர். ஓவியங்கள் காணப்படும் கூரைக்கு கீழே உள்ள கல் பரப்பில் சுமார் 10 பேர் அமரும் வண்ணம் உள்ளது. பாறை ஓவியங்கள் பெரும்பாலும் மலைக் குகைகளில் காணப்படும். இது போன்று ஒரு சில இடங்களில் மட்டும் தரைமட்ட பாறைகளில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். …

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை