சிட்னி : 2 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 21ம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக எல்லைகள் திறக்கப்படும் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் உலகளவில் குறைந்து வருவதை அடுத்து, பல்வேறு நாடுகள் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகின்றன. ஆனால் ஆஸ்திரேலியா அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளை நீட்டித்து வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் நாட்டிற்குள் நுழைய ஆஸ்திரேலிய அரசு மறுத்து வந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுக்குள் இருப்பதை அடுத்து, சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம் என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் குழு பரிந்துரைத்தது. இதனை ஏற்றுக் கொண்ட ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், 2 ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கும் எல்லைகள் வரும் 21ம் தேதி முதல் திறக்க உத்தரவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் கடந்த 2020 மார்ச் மாதம் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்து இருந்தது. அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், வரும் 21ம் தேதி முதல் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. …