தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அடுத்த கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சங்கர்கணேஷ் மனைவி ராமலட்சுமி (29). சங்கர்கணேஷ், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் ராமலட்சுமி, மகன் ரித்தீஷ்(7), மகள் சாதனா(2) ஆகியோருடன் கவுண்டம்பட்டியில் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் ராமலட்சுமி, வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவு மர்ம நபர்கள், கதவை தட்டியுள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த ராமலட்சுமி, கதவை திறந்து பார்த்த போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நிற்பதை கண்டு அலறினார். அப்போது மர்மநபர்கள், தூங்கி கொண்டிருந்த ராமலட்சுமியின் 2வயது குழந்தை சாதனாவை, தங்களது கட்டுப்பாட்டில் வைத்தபடி சினிமா பாணியில் கத்திமுனையில் மிரட்டியபடி குழந்தையின் தாயான ராமலட்சுமியிடம் இருந்து3.5 பவுன் நகைகள் மற்றும் 5 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.இது குறித்து ராமலட்சுமி சங்கரலிங்கபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்….