2 பஸ்கள் மோதல்: 28 பேர் காயம்

திருப்புத்தூர், டிச.19: சென்னையிலிருந்து 20 பயணிளுடன் கீழக்கரை நோக்கி நேற்று அதிகாலை வந்த தனியார் சொகுசு பஸ்சும், விருதுநகர் மாவட்டம் ஆணையூரிலிருந்து மேல்மருவத்தூருக்கு 52 பயணிகளுடன் ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட தனியார் பஸ்சும் திருப்புத்தூர் அருகே நெடுமரம் பகுதியில் வந்தபோது நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த அப்பகுதியில் இருந்த பொதுமக்களும், காவல்துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பேருந்துகளிலும் மொத்தம் 28 பேர் காயமடைந்தனர்.

அவர்களுக்கு திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் அருப்புக்கோட்டையில் இருந்து பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் ராமகிருஷ்ணன்(50) என்பவருக்கு வலது கை துண்டானது. மேலும் பெருமாள்(40), மற்றும் சென்னை பேருந்து டிரைவர் ஜெயக்குமார்(35), பேருந்துகளில் பயணம் செய்த அன்னலட்சுமி(50), மலர்மன்னன்(23), முத்துமாரி(48) ஆகிய ஆறு பேரும் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து திருப்புத்தூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி