தர்மபுரி, ஜூலை 22: ஓமலூர் எம்.ஓலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாலதி (29). இவர்கள் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டியில், வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தனர்.இந்நிலையில், மாலதி 4 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரிந்து, தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த மாதம் மாலதிக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், சக்திவேல் குழந்தையை பார்க்க வரவில்லை. இதையடுத்து மாலதி கணவரை பார்க்க பெரியாம்பட்டிக்கு சென்றார்.
அப்போது அவரை சக்திவேல் தகாத வார்த்தையால் திட்டி, தாக்கியதுடன் கத்திமுனையில் மிரட்டினார். இதுகுறித்து தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மாலதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சக்திவேலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதும், 2வதாக மாலதியை திருமணம் செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.