சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 19ம் தேதி தொழில்நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 19ம் தேதி பொது விடுமுறை விடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு தொழில்நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை நேற்று வெளியிட்ட உத்தரவில், ‘‘தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். விடுப்பிற்கு சம்பள பிடித்தமோ, சம்பளக் குறைப்போ செய்ய கூடாது. அரசின் இந்த உத்தரவுகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது….