சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது, இலங்கைக்கு உணவு பொருட்கள் அனுப்புவது குறித்து முதல்வருடன் விவாதித்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் வாழும் பூர்வீக தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்களின் கண்ணீரை துடைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனித நேயத்தோடு முடிவெடுத்து உடனடியாக அவர்களை பசி, பட்டினியில் இருந்து விடுவிக்கும் நோக்கத்தில், ரூ.134 கோடி மதிப்புள்ள 40ஆயிரம் டன் உயர் தர அரிசி, ரூ.15 கோடி மதிப்பில் 500 டன் பால் பவுடர், ரூ.28 கோடி மதிப்பில் 137 வகையான மருந்துகள் என மொத்தம் ரூ.177 கோடி பொருட்கள் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசு அதற்கு எந்தவிதமான முட்டுக்கட்டை போடாமல் இந்த பொருட்களை அனுப்புவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த பொருட்கள் எல்லாம் இலங்கைக்கு சென்று அங்குள்ள தமிழர்களின் துன்பம் தணிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்….