சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்தது. அதன்படி, கடந்த சில தினங்களாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சி, சேலம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், நெய்வேலி, கடலூர், புதுச்சேரி, திண்டிவனம், திருவண்ணாமலை, போளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 162 பேருந்துகள் 30ம் தேதி (நேற்று) முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான தொடக்க விழா நேற்று காலை மாதவரம் பேருந்து நிலைய வளாகத்தில் நடந்தது. சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமை வகித்தார். அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து பேருந்துகளை ெதாடங்கி வைத்தார். ஏற்கனவே மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி, நெல்லூர், சித்தூர், தடா, ஐதராபாத், செகந்திராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கு மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதால் சென்னை புறநகர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.