வேலூர், செப்.14: காட்பாடி அருகே 16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது தொரடர்பாக வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் தீனா(24), கூலித்தொழிலாளி. இவர் 16 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டாராம். பின்னர் இருவரும் ஆந்திராவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிறுமி கர்ப்பிணியானார். இதனால் தாய் வீட்டில் வந்து தங்கி உள்ளார். அப்போது சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் டாக்டர்கள் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள், சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள் காட்பாடி போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாமளா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சிறுமியை காதலித்து திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய தீனா மீது போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.