திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுகா, மேல்பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜீத்குமார்(23). மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் அதேபகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் கடந்த 29.4.2019 அன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுதொடர்பாக கடலாடி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மலர் வழக்குப்பதிந்து விசாரித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அஜீத்குமாரை கைது செய்தனர்.
மேலும், இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று தீர்ப்பு அளித்தார்.
அதன்படி, சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபர் அஜீத்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹1000 அபராதமும் விதித்தார். தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அஜீத்குமாரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியை கடந்தாண்டு அஜீத்குமார் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனாலும், வழக்கின் தன்மை அடிப்படையிலும், பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகார் மற்றும் வாக்குமூலம், மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையிலும் வாலிபர் அஜீத்குமாருக்கு போக்சோ சட்டப்பிரிவின்கீழ் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.