சென்னை: மகாத்மா காந்தியின் நினைவு நாள் நேற்று முன்தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரினா காந்தி சிலை அருகே நேற்று 15க்கும் மேற்பட்ட முதியவர்கள் தேசிய கொடி மற்றும் காந்தி புகைப்படத்துடன் திடீரென ஒன்று கூடினர். அவர்கள் காந்தி நினைவு நாளில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூட வலியுறுத்தி திடீரென காந்தி சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார், அவர்களை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்துவைத்து மாலையில் விடுவித்தனர். மெரினா கடற்கரை பகுதியில் போராட்டம், பேரணி, உண்ணாவிரதம் போன்றவை நடத்த சென்னை மாநகர காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி 15 முதியவர்கள் காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த முயன்றதால் அவர்கள் மீது மெரினா போலீசார் அத்துமீறி ஒன்று கூடியது, சிட்டி போலீஸ் ஆக்ட் 41 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.