Sunday, June 30, 2024
Home » இலங்கை சிறையில் விடுதலையான 15 தமிழக மீனவர்கள் சென்னை வருகை

இலங்கை சிறையில் விடுதலையான 15 தமிழக மீனவர்கள் சென்னை வருகை

by Neethimaan

மீனம்பாக்கம்,: இலங்கை சிறையில் விடுதலை செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்கள் விமானம் மூலமாக இன்று காலை சென்னை விமானநிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அவர்களின் சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு வாகனங்களில் அனுப்பிவைத்தனர். தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், கடந்த 1ம் தேதி அதிகாலை கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லை பகுதியில் 2 விசைப் படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை பிடிப்பதாக குற்றம்சாட்டி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்கள் மற்றும் 2 விசைப் படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு சென்றனர். அதன்பின், அவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே தமிழ்நாடு முதல்வரிடம், இலங்கை கடற்படையினரிடம் பிடிபட்ட 15 மீனவர்களின் குடும்பத்தினர், அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம் எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து இலங்கை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் 15 தமிழக மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.அவர்களை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் பராமரிப்பில் இலங்கை அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர், 15 ராமேஸ்வர மீனவர்களையும் தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளில் இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் அனைவருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட் எனும் அவசரகால பயண அனுமதியை இந்திய தூதரகம் வழங்கியது. மேலும், 15 மீனவர்களும் விமானத்தில் சென்னை செல்வதற்கான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்நிலையில், இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு வந்த ஏர்இந்தியா விமானத்தில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்களும் சென்னை வந்திறங்கினர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். பின்னர் 15 பேரையும் சிறப்பு வாகனத்தில் ஏற்றி, சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

You may also like

Leave a Comment

three × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi