வேலூர்: வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 1,552 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவில் 11.20 லட்சம் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலமாக வாக்களித்தனர். அதேபோல், 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் என மொத்தம், 8,485 பேர் தபால் வாக்கு செலுத்தினர். வாக்கு எண்ணிக்கை வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்தது. தபால் வாக்குகள் 3 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதில் 7385 வாக்குகள் செல்ல தகுந்தவையாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதேசமயம், 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 1,100 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
பல்வேறு காரணங்களால் இவை நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தபால் வாக்குகளை பொறுத்தவரை, அதிகபட்சமாக திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 2,257 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ஏசி.சண்முகம் 2,034 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 718 வாக்குகள் பெற்றனர். மேலும் 1,552 தபால் வாக்குகள் நிராகரிப்பு செய்யப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘தபால் வாக்குகளுக்கான படிவங்களை முறையாக பூர்த்தி செய்யாதது. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்து தபால் வாக்கு கவர்களை முறையாக ஒட்டாதது என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 1552 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன’ என்றனர். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, 2,045 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.