ராணிப்பேட்டை : சோளிங்கர் வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் மழையால் 150 ஏக்கர் அளவில் நெற்பயிர் சேதம் அடைந்துள்ளதை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் நேற்று ஆய்வு செய்தார். மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த சில தினங்களாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சோளிங்கர், காவேரிப்பாக்கம், வாலாஜா, அம்மூர், ஆற்காடு, பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை பெய்ததுகொட்டியது. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் வட்டாரத்தில் வேலம்,மருதாலம், காட்ரம்பாக்கம், ஜம்புகுளம், கொடைக்கல், போளிப்பாக்கம், தப்பூர், தாலிக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 150 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சில தினங்களாக பெய்த மழை காரணத்தினால் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இந்நிலையில் சேதமடைந்துள்ள நெற்பயிற்களை வேலம் கிராமத்தில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் செல்வராஜ், சோளிங்கர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பிரபு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சேதமடைந்த நெற்பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.