மதுரை, மார்ச் 17: மதுரை மாநகராட்சி தரப்பில் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழில், குழந்தைகளின் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. ஒருவருடைய பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமை பெறும். ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின், அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு – இறப்பு பதிவாளரிடம் அளித்து, கட்டணமின்றி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். இதில் தாமதம் ஏற்பட்டு 12 மாதங்களுக்குப் பின் குழந்தையின் பெயரினை 15 வருடங்களுக்குள் பதிவு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு கால தாமதக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும்.
இதுபோல் குழந்தைகளின் பெயரை பதிவு செய்யாமல் விடுபட்டவர்களுக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டது. இந்த அவகாசம் 2019ம் ஆண்டு இறுதியுடன் முடிவுற்றது. இதனால் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அந்நாட்டு குடியுரிமை பெறுதல் மற்றும் மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. எனவே இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிறப்பு பதிவு செய்து 15 ஆண்டுகள் நிறைவடைந்தும், பெயர்களை பதிவு செய்யாமல் இருக்கும் அனைவருக்கும் கூடுதலாக 5 ஆண்டு கால அவகாசம் வழங்கி இந்திய தலைமை பதிவாளர் உத்தரவி்ட்டுள்ளார்.
இதன்படி வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் 2024ம் ஆண்டு டிசம்பர் 31 வரை மட்டுமே உள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில், 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பின் உரிய ஆவணங்களுடன் (பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல்) ரூ.200 தாமத கட்டணம் செலுத்தி மதுரை மாநகராட்சி, அறிஞர் அண்ணா மாளிகை, தல்லாகுளம், மதுரை, மைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இதில் தவறினால் கால அவகாச நீட்டிப்பு வழங்கப்படாது என, மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.