வேலூர், செப்.30: 15 ஆண்டுகளை கடந்த பழமையான அரசு போக்குவரத்துக்கழக வாகனங்கள் உட்பட அரசின் பல்வேறு துறைகளின் வாகனங்களின் பதிவுக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989 விதி 52(ஏ)வின்படி 15 ஆண்டுகளை கடந்த அனைத்து வாகனங்களும் பயன்பாட்டில் இருந்து கழிக்கப்பட வேண்டும். இந்த நடைமுறை 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், அரசு போக்குவரத்துக்கழகம், மருத்துவம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்துறை, ஆம்புலன்ஸ் சேவை, உள்ளாட்சி அமைப்புகள் என அரசின் அத்தியாவசியமான துறைகளின் கீழ் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கும் 15 முதல் 20 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கான பதிவு நீட்டிப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதியான இன்று வரை நீட்டிக்கப்பட்டது.
இக்காலக்கெடு நிறைவடையும் நிலையில் மாநிலத்தில் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் 14 ஆயிரத்து 611 வாகனங்களில் 6 ஆயிரத்து 341 வாகனங்களின் பதிவு சான்று நீட்டிப்பை வரும் 2025ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த உத்தரவில் இதனை செயல்படுத்த போக்குவரத்து ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.