திங்கள்சந்தை: குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு மாணவனின் தந்தை கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது 13 வயது மகன் கண்ணாட்டுவிளையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான். அங்கு 47 வயது ஆசிரியர் ஒருவர் எனது மகனுடன் நட்பாக பழகி உள்ளார். அவர், கடந்த 14ம் தேதி மதிய உணவு இடைவேளையின்போது எனது மகனின் தோளில் கையை போட்டு பேசிக் கொண்டே ஆய்வுக் கூடத்திற்கு அழைத்துச் சென்று தகாத உறவில் ஈடுபடுத்தி உள்ளார். இதனால் அவன் வலியால் அவதிப்பட்டுள்ளான். இதுகுறித்து கேட்டபோது பள்ளி ஆசிரியர் தவறாக நடந்தது குறித்து எங்களிடம் கூறினான். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கடந்த 20ம் தேதி பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.