குடியாத்தம், செப்.28: பேரணாம்பட்டு அருகே 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பேரணாம்பட்டு அடுத்த சாராங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு மகன் ரஜினி(40), கூலித்தொழிலாளி. திருமணம் ஆனவர். அதே பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. 8ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று ரஜினி சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கிராமத்தில் உள்ள ஒதுக்குபுறத்திற்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்பித்து வந்து கிராமத்திற்குள் சென்று அவரது உறவினர்களிடம் நடந்தது குறித்து தெரிவித்து கதறி அழுதார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கூலித்தொழிலாளி ரஜினியை பிடித்து வைத்து, சரமாரியாக தாக்கி பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஜினியை கிராம மக்களிடம் இருந்து மீட்டு குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ரஜினியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.