12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கிய நாங்கள் பெண்களுக்கு எதிராக எப்படி அரசாணை கொண்டு வருவோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆவேச பேச்சு

சென்னை: ஆசிரியைகளுக்கு 12 மாதம் மகப்பேறு விடுப்பு அளித்து உத்தரவிட்ட இந்த அரசு, பெண்களுக்கு எதிராக அரசாணை கொண்டு வரவில்லை என்று அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.  பள்ளிக் கல்வித்துறையில் அரசாணை எண் 243 (மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர்கள் மாற்றம்) வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சென்னையில் நேற்று நன்றி அறிவிப்பு மாநாடு நடந்தது.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று ஆசிரியர்கள் சார்பில் கலைஞர் நூற்றாண்டு குறித்து எழுதிய ‘கல்வியில் கலைஞர்’ என்ற நூலை வெளியிட்டு பேசியதாவது:
53 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒரே கையெழுத்தை போட்டு ஆசிரியர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய திமுக இயக்கத்தை சேர்ந்தவன் நான். அரங்கத்துக்கு வெளியில் இருப்பவர்களும் இதை கேட்க வேண்டும். இந்த அரசாணை பெண்களுக்கும் எந்த வகையில் பயன்தரும் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஆசிரியர்கள் மீது எந்த பாதகமான நடவடிக்கையும் எடுக்ககூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டவன் நான். பெண்களுக்கு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு கொண்டு வந்த நாங்கள் எப்படி பெண்களுக்கு எதிராக அரசாணையை கொண்டு வருவோம். இந்த அரசே பெண்களுக்கானது என்பதை உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன் கூறுகையில், ‘‘அரசாணை 243-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ஒரு ஒன்றியத்தில் எந்த பணியில் சேர்கிறார்களோ அவர்கள் பல ஆண்டுகளாக வேறு வழியின்றி பணியாற்றினார்கள். இன்று அவர்கள் தங்கள் சொந்த மாவட்டங்கள் மற்றும் விரும்பிய மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை திட்டமிட்டு சிலர் பாதிப்பதாக சொல்லி வருகின்றனர். 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு இன்றி ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் இன்றி சிரமப்பட்டு வந்தனர். இப்போது அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இந்த அரசாணை போற்றப்பட வேண்டியது’’ என்றார்.

Related posts

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

வீட்டில் இருந்து திருடிய ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70 ஆயிரம் அபேஸ்