மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகையில் கோடைகாலங்களில் இதமான காலநிலை நிலவுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வருவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டிற்கான கோடை சீசன் தொடங்கியுள்ளது.
ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகைக்கு வருகை தந்து சுற்றுலா தலங்களை காண ஆர்வம் காட்டுவதால், சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காகவும், கண்டு ரசிப்பதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடைபெற்று வருகிறது.
இந்த கோடை விழாவானது காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ரோஜா கண்காட்சி, வாசனை கண்காட்சி ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து 125வது மலர் கண்காட்சி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் பிரசித்தி பெற்ற உதகை தாவரவியல் பூங்காவில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மலைகளின் அரசிக்கு மலர் மகுடம் சூட்டும் விதமாக மலர் கண்காட்சி நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. மலர் கண்காட்சியை 1 லட்சத்திற்கும் மேலான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசினார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.