மதுரை, ஏப்.4: மதுரையில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் 12 அம்ச சோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் (டாக்பியா) சார்பில், நகைக்கடன் தள்ளுபடி மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடிக்கான தொகையை வட்டியுடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்கள் பிரச்னைகளை கண்டறிய குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதுரையில் இச்சங்க பணியாளர்கள் ஊர்வலம் நடத்தினர்.
மதுரை உலக தமிழ் சங்கம் முன் துவங்கிய இந்த ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நடந்த ஊர்வலத்தில் மாவட்ட செயலாளர் கணேசன், பொருளாளர் பரூக்அலி, துணை தலைவர் சோமசுந்தரம், செல்வம், இணை செயலாளர்கள் நீதி முத்தையா, சுமதி உட்பட பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை கலெக்டர் அனீஷ் சேகரிடம் வழங்கினர்.